Tuesday 19 March 2013

பம்பரம்

விளையாட்டப் பத்தி விளையாட்டா ஏதாவது எழுதணும்னு நெனச்சிக்கிட்டே இருந்தேன். திடீர்னு பாத்தா நம்ம சின்ன புள்ளையா இருக்கும்போது ஆடுன வீர விளையாட்டு எல்லாம் ஞாபகத்துக்கு வந்திடுச்சு பம்பரம் ஆட்டத்தப் பத்திச் சொல்லிடுரேன்....

ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொரு ஆட்டம் நடக்கும் நம்ம ஊருல. கொஞ்ச நாளு கோலிக்கா வச்சு ஆடிக்கிட்டு திரியுவோம் நாங்க. திடீர்னு பாத்தா கையில பம்பரமும் கையுமா அலையுவோம். பம்பரத்தைச் சுத்த விட்டு அப்படியே பம்பரக் கயித்தால அப்படியே சுன்டி தூக்கி பிடிச்சு'கோஸ்'னு சொல்லுவோம்.

பம்பரம் கடையில் வாங்கும்போது ஆணியோடத்தான் வரும். ஆனா அந்த ஆணியை வச்சுக்கிட்டு ஒரு பயலும் விளையாட மாட்டான். பம்பர வெலைல பாதி குடுத்து கொல்லர் கடைக்குப் போயி ஆணி புதுசா வைப்போம் ஆணின்னா உங்க வீட்டு ஆணி எங்க வீட்டு ஆணி இல்ல. 'ஆக்கர்' போடுறதுக்காகவே நாலு முக்கு ஆணிய நல்லா இழைச்சு கூர்மையா வச்சுக்கிட்டு பம்பரத்துல குத்துனா குத்துற குத்துல ரெண்டா உடஞ்சு ஓடும் பம்பரம். ஆண்ட்ருஸ் இதுல பெரிய கில்லாடி.அது வேற யாரும் இல்லைங்க நான் தான்

ஆட்டம் எப்படித் தொடங்கும் தெரியுமா? மொதல்ல எல்லா பயலுவளும் பம்பரத்தைக் கயித்துல சுத்தி தயாரா இருப்போம். ஒண்ணு ரெண்டு மூணு சொன்னதும் பம்பரத்தைச் சுத்த விட்டு யாரு கோஸ் எடுக்குறாங்களோ அவங்க தப்பிச்சாங்க. கடைசியா கோஸ் எடுத்தவன் பம்பரம் மட்டும் சின்ன வட்டத்துக்கு மத்தியில வந்து வைக்கணும். இந்தப் பம்பரத்து மேல குத்தி அந்தப் பம்பரத்தை வட்டத்துக்கு வெளிய எடுக்கணும்.(நம்மள மாதிரி ஒப்புக்குச் சப்பாணியா ஆடுறவன் வட்டத்துக்குள்ள ஓரமா குத்துனாலும் போதும்) பம்பரம் வெளிய வந்துட்டா, வந்ததுமே பழையபடி எல்லாரும் கோஸ் எடுக்கணும். அப்ப எவன் கடைசியா கோஸ் எடுக்குறானோ அவன் பம்பரம் உள்ள இருக்கணும். இதுதான் அடிப்படையான ஆட்டம்.

இதுல இன்னொரு விசேசம் இருக்கு. பம்பரம் குத்தும்போது வட்டத்துக்கு உள்ளேயே பம்பரம் ஆடிக்கிட்டு நின்னுச்சுன்னா, அதை உள்ள பம்பரம் வச்சிருக்குறவன் காலால 'அமுக்கிப் போடு அமாவாசையை'ன்னு சொல்லிக்கிட்டே அமுக்கணும். அதுக்குள்ள ஆடுற பம்பரத்தை எவனாவது வெளிய எடுத்துட்டா தப்பிச்சிடலாம். இப்படி காலால அமுக்கிடக் கூடாதுங்குறதுக்காக இன்னொரு ஏற்பாடும் செய்வோம். பம்பரத்துக்கு மேலயும் ஆணி. நமக்கு வேண்டப்படாதவன் அப்படி ஆணியோட வந்தா, 'மேல ஆணி வச்சுக்கிட்டு என்ன மயித்துக்குடே வெளயாட வருதே?'ன்னு கிண்டல் செஞ்சுட்டு, நாங்க மட்டும் மேலயும் கீழயும் ஆணி வச்சுக்கிட்டு விளையாடுவோம் 

மேலே ஆணி வைக்குறதுல இருக்குற வசதி என்னன்னா நம்ம பம்பரம் வட்டத்துக்கு உள்ள சுத்துனாலும் ஒருபயலும் அமுக்கிப் போடு அமாவாசை சொல்ல மாட்டான். உணர்ச்சிவசப்பட்டு அமுக்குனா, கால்ல குத்தி கட்டுப் போட்டு அவனை ஊட்டுக்குள்ள அமுக்கிப் போட வச்சுடுவோம்லா. 

பம்பரம் குத்தும்பொதே உள்ள இருக்குற பம்பரத்தோட செரட்டையில் குத்தி அதுல ஆழமா பள்ளம் போடுததுக்குப் பேருதான் ஆக்கர் போடுறது.எவ்வளவு ஆக்கர் வாங்குதானோ அவ்வளவு கேவலமான விளையாட்டு விளையாடுதான்னு அர்த்தம். ஆனா, என் பம்பரம் எப்பவும் புதுசா பளபளப்பாவே இருக்கும். ஏன்னா என் பம்பரத்துல ஆக்கர் போட்டான்னா அவன் முதுகுல ஆக்கர் போடுததுக்கு நாலு பேரு எப்பவும் தயாரா வச்சிருப்போம்.(பம்பர தாதான்னு வச்சுக்குங்க)

இப்ப இந்த விளையாட்டெல்லாம் கிராமத்துல கூட விளையாட மாட்டுக்குறானுங்கனு நினைச்சாலே கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு...

கோடன்குளம்

திருநெல்வேலியில் இருந்து 28கிமீ தூரத்துல இருக்குதுங்க எங்க கோடன்குளம் கிராமம். எங்க ஊர நெருங்கும் போதே வானுயர்ந்த பனைமரங்களும், பொட்டல் காடும் உங்களை வரவேற்கும். எங்க ஊருக்கு எப்பவாது தாங்க பேருந்து வரும்(அதுக்காக எங்க ஊர பட்டிகாடுன்னு நினைக்காதிங்க வீட்டுக்கு வீடு வாகனம் இருப்பதால் பேருந்தை யாரும் பயன்படுத்துவதில்லை)எங்க ஊருல்ல சுமார் நூறு வீடுகள் இருக்குங்க. ஊரை சுற்றி வயல் வௌிகளும்,குளமும் எங்க கிராமதிற்கு அழகு சேர்ப்பவை ஆகும். எங்கள் ஊரில் இருக்கும் உயர்ந்த கோபுரங்கள் கொண்ட இரு தேவாலயங்கள் உள்ளன. அனைத்து வீடுகளின் முன்பகுதியில் இருக்கும் மரங்களும், பூஞ்செடிகளும் எங்க கிராமத்துக்கு மேலும் அழகு சேர்ப்பவை ஆகும். மேலும் எங்கள் ஊரில் ஆரம்ப பாடசாலையும், 1கிமி தொலைவில் உயர் நிலைபள்ளியும, 1கிமீ தொலைவில் மருத்துவமனை, 2கிமீ தொலைவில் ஆசிரியர் பயிற்சி பள்ளியும் உள்ளது.எங்கள் ஊர் விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குகிறது. கபடி, கிரிக்கெட் போட்டிகளில் சுற்று வட்டாரத்தில் எங்கள் ஊரே ஆதிக்கம் செலுத்துகிறது(கூகுல்ல வேனா தேடி பாருங்க)

அன்போடு வந்த வரை வாழ வைக்கும் நாங்கள்,வம்போடு வந்தவனை கூறு போட்டு விடுவோம் பாசக்காரபயலுக!!!!!

Monday 18 March 2013

நம்ம திருநெல்வேலிங்க

தமிழ்நாட்டின் தெற்கே இருந்து கல்வியில் பெருமை சேர்க்கும் திருநெல்வேலி தான் நான் பிறந்த ஊர் .

நம்ம ஊர் (எங்க ஊர்னு சொல்லற பழக்கம் நம்ம ஊர்ல இல்லிங்க ) அல்வாவும், அருவாவும் போதுங்க நம்ம ஊரை பற்றி சொல்ல,அது போக நிறைய பிரசித்தி பெற்ற விசயங்கள் இருக்குங்க

தாமிரபரணி ஆறு இருக்குங்களே அதுல குளிச்சா குளிச்சு கிட்டே இருக்கலாங்க அதுல இருக்குற சுகமே தனி தான் .இது உற்பத்தி ஆகும் பாபநாசம் மலைத் தொடர் ரொம்ப ரம்யமான பகுதி .இங்கு காரையாறு ,சேர்வலாறு என்று ரெண்டு அணைக்கட்டு இருக்குங்க ,காரையாறு அணையின் மறு பகுதியில் பான தீர்த்தம் அருவி பிரம்மாண்டமா விழும் அழகை பார்த்துட்டேஇருக்கலாம் அணைக்கு கீழே அகஸ்தியர் அருவியும் உண்டு .இந்த அருவிகளின் சிறப்பம்சம் வருடம் முழுக்க தண்ணீர் வற்றாது.

எல்லோருக்கும் குற்றாலம் தெரியும் அதுபோல மணிமுத்தாறு அருவியும் குளிப்பதற்கு சுகமா இருக்கும் 

ஊட்டி, கொடைக்கானல் பற்றி நினைக்கிறவங்க மணிமுத்தாறு மேலே உள்ள மலைப்பகுதியான மாஞ்சோலை, காகாச்சி ,கோதையாறு போன்ற பகுதிக்கும் போயி பாருங்கசும்மா சிலுசிலுன்னு இருக்கும் .

இந்த மாதிரி இடங்களுக்கு போகும்போது சாப்பாடும் கூடவே கொண்டு போயிருங்க அங்கு ஹோட்டல்கள் கம்மி

கல்வியில் பெருமை சேர்க்கும்னு சொல்லிட்டு அத பற்றி எழுதலன்னா எப்படி?

நம்ம ஊர்ல பள்ளி ,கல்லூரிகளுக்கு குறைவு இல்லைங்க‌ ஆண்டு தோறும் மிகச் சிறந்த பட்டதாரிகள் வெளிவருகிறார்கள்.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லப்படும் பாளையங்கோட்டை நம்ம மாவட்டத்துல தான் இருக்கு.

இவ்வளவு பெருமை உள்ள நம்ம ஊர்ல ஒரே ஒரு கெட்ட பழக்கம். எங்ககிட்ட அன்பா இருந்தா உயிரையும் கொடுப்போம் வம்பு கிம்பு பன்னிட்டிங்கனா உயிரை எடுத்துடுவோம்

சி.எம்.எஸ்.சுத்தாங்க சுவிஷேச சபை

சி.எம்.எஸ்.சுத்தாங்க சுவிஷேச சபை திருநெல்வேலி மாவட்டத்தில் கோடன்குளம் கிராமத்தில் உள்ளது. இங்கு வருடம் தோறும் மே மாதம் 23 ம் தேதியில் ஆலய பிரதிஷ்டை பண்டிகையும் ,அன்று இரவு அசன விருந்தும்,24ம் தேதி சுத்தாங்க பன்டிகையும், அதனை தொடர்ந்து தாய்மார் பன்டிகை, இரவு தாய்மார்களாள் ஏற்பாடு செய்யப்பட்ட டீ பார்ட்டியும் கோலாகலமாக நடைபெறும் .அதே போல் செப்டெம்பர் இரண்டாம் வார வௌளி ஆயத்த ஆராதனையும் ,சனி கிழமை மதியம் நடைபெரும் காணிக்கை ஆராதனைக்கு பல ஊர்களிலும் இருந்து வாலிபர்கள்,வயோதிபர்கள் என திரளானவர்கள் கலந்து கொள்வார்கள் அதனை தொடர்ந்து இரவு பஜனை நடைபெறும் .ஞாயிறு காலை ஞானஸ்நான பன்டிகையும் மதியம் வாலிபர் பண்டிகையும் அதை தொடர்ந்து வாலிபர்கள் தலமையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதில் சபை வாலிபர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.அதிலும் பானை உடைத்தல் மிகவும் விரு விருப்பாக நடைபெறும்,மற்றும் திருமணம் ஆகாத வாலிப சிங்கங்களுக்கும் திருமணம் ஆனவர்களுக்கும் நடைபெரும் கயிறு இழுத்தல் போட்டி கிராம மக்களின் கரகோசத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் அதில் பெறும்பாலும் வாலிப சிங்கங்களே வெற்றி பெறுவர் .விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து வாலிபர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேனீர் விருந்தும் அதனை தொடர்ந்து இரவு இன்னிசை கச்சேரியுடன் ஆனந்த பன்டிகை நிறைவுபெறும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட காலங்களிலும் ஆலயம் முழுவதும் பூக்களாள் அலங்கரிக்கப்பட்டும் ,கோபுரங்களிலும் ஆலய முன்பகுதியில் இருந்து தெரு முழுவதும் வண்ண விளக்குகளாலும் ஸ்டார்களாலும் கிராமமே மின்னொளியில் ஜொலிக்கும் .இந்த ஏற்பாடுகளை சபை வாலிபர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்வர் .கிறிஸ்துமஸ் ஆராதனை திசம்பர்25 அதிகாலை 3மணி அளவில் நடைபெறும் .அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெறும் . இரவு நடைபெறும் மரவிழாவில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் நடனமும் சபை மக்களுக்கு பரிசளிப்புடன் நிறைவு பெறும் .புது வருட ஆராதனை சரியாக 12மணிக்கு ஆராதனை ஆரம்பமாகும் .அன்று இரவு குருவானவர் சந்திப்புடன் நிறைவுபெறும்

"கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்"

""கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்""

நான்குநேரி அருகில் உள்ள கூந்தன்குளம் 1994-ம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி மாதம் கூடு கட்ட துவங்கும். ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன.எங்கள் ஊர் கோடன்குளம் மிக அருகாமையில் இருப்பதால் பள்ளியை கட் அடித்து விட்டு இங்கு வந்து விடுவேன் விடுமுறை நாட்களில் கூட நன்பர்களுடன் சேர்ந்து சைக்கிளில் வந்து விடுவேன்

இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம்

தமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இடங்கள் நிறைய இருக்கின்றன.  ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம்.்எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு!

குற்றாலத்திற்கு முன்பே 5 கிமீ தொலைவில் இருக்கும் தென்காசியை அடையும் பொழுதே, குற்றாலத்தின் மணம் காற்றில் மிதக்கும்.  இதமான காற்று உடலை வருடும்.

குற்றாலத்தை நெருங்க நெருங்க உள்ளுக்குள் மனம் பாட ஆரம்பித்துவிடும். மேக கூட்டம் அலைந்து கொண்டே இருக்கும். எப்பொழுது கருமேகமாய் அடத்தியாய் வருகிறதோ,  அப்பொழுது விழும் சாரல். லேசாக அடிக்கும் வெயில். சாரல், இதமான வெயில் என மாறி மாறி செல்லும். இந்த விசேஷ குற்றாலத்திற்கென்றே சிறப்பான துண்டுகள் விற்கப்படுகின்றன.

எங்கு திரும்பினாலும் மக்கள். ஒன்று குளிக்க போய்கொண்டு இருப்பார்கள்.  அல்லது குளித்துவிட்டு வந்துகொண்டிருப்பார்கள்.  மக்களின் சந்தடி எல்லாம் விலக்கிவிட்டு, கொஞ்சம் காதுகொடுத்து கேட்டால், அருவியின் சத்தம் மெல்ல கேட்கும்.  நம்மை செல்லமாய் அழைக்கும்.

போய் சேர்ந்ததும் ஒரு விடுதியில் அறையை பிடித்து, சுமைகளை போட்டுவிட்டு, உடனே குளிக்க கிளம்பிவிடுவோம். அருகில் இருப்பது மெயின் அருவி. குளிப்பது சுகம். அருவியில் குளிப்பது சுகமோ சுகம். குளிப்பது என்பது சாதாரண வார்த்தை.  குதூகலிப்பது. விளையாடுவது தான் சரி.

எவ்வளவு நேரம் குளித்தாலும், எத்தனைமுறை குளித்தாலும் அருவியின் குளியல் அலுக்காது. காடுகளின் வழியே, பல மூலிகைகளின் வழியே பயணப்படுவதால், குற்றால அருவியின் நீர் உடலை தொந்தரவு செய்வதில்லை.

பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு வகை. மக்கள் அடுத்தடுத்த அருவிகளில் குளிக்க பயணப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

Sunday 17 March 2013

திருநெல்வேலி லே!!!

அன்புன்னாஉயிரைகொடுப்போம் வம்புன்னாஉயிரைஎடுப்போம் <<<<திருநெல்வேலிகாரங்க>>>>